செய்திகள்
நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த போது எடுத்தப்படம்.

திருப்பூரில் இன்று ரூ.56 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2021-11-22 11:11 GMT   |   Update On 2021-11-22 12:49 GMT
முதல்-அமைச்சர் காரில் வரும் வழித்தடம் மற்றும் விழா நடக்கும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானம் பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:

திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடனுதவி, மகளிர் திட்டம் சார்பில் 1339 பேருக்கு ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நிதியுதவி, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்பட 21 துறைகளின் சார்பில் 4 ஆயிரத்து 335 பேருக்கு ரூ.55 கோடியே 60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

மேலும் மின்வாரியத்துறை சார்பில் தெற்கு அவினாசி பாளையம், கே.அய்யம் பாளையம், சின்னே கவுண்டன்பாளையம் துணைமின்நிலையம், புதுராமகிருஷ்ணாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், தாராபுரம் கால்நடை மருத்துவமனை பள்ளிக்கட்டிடங்கள் உள்பட ரூ.28 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 

அதுபோல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலமாக ரூ.41 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கொழுமங்குழி ஊராட்சி மன்ற கட்டிடம், மாம்பாடி ஊராட்சி புளியம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ..56கோடியே 29 லட்சத்து 24ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

இதைத்தொடர்ந்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில் துறையினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.-

இந்நிகழ்ச்சிகளில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, எஸ்.பி., சசாங் சாய், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா தலைமையில் 1 டி.ஐ.ஜி., 4 போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

திருப்பூர் முழுவதும் போலீசார் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டனர். முதல்-அமைச்சர் காரில் வரும் வழித்தடம் மற்றும் விழா நடக்கும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானம் பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதல்வரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருப்பூரில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் அரங்கம் அமைக்கப்பட்டது. மேடையை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
 
திருப்பூரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் பூ மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. அப்பணிகள் தொடர்பான மாதிரி வரைபடங்கள் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து அதிகாரி களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கோவையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், அதன்பிறகு திருப்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தார். கோவையில் இருந்து கார் மூலமாக திருப்பூர் வந்த அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் அவிநாசி மேம்பாலம் அருகில் மற்றும் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
Tags:    

Similar News