செய்திகள்
மருத்துவமனையில் தாய்-குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

ரெயில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண் - ரெயில் பெயரை வைக்க விருப்பம்

Published On 2019-11-28 05:54 GMT   |   Update On 2019-11-28 05:54 GMT
சென்னை வந்த ரெயிலில் குழந்தை பெற்றதால் தனது குழந்தைக்கு ரெயிலின் பெயரை வைக்க விரும்புவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
கம்மம்:

பீகார் மாநிலம் சாப்ரா பகுதியை சேர்ந்தவர் பிங்கி தேவி (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பீகாரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை வரும் கங்கா-காவிரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

பிங்கி தேவி அதிகாலையில் ரெயில் கழிவறைக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது ரெயில் தெலுங்கானா மாநிலம் டோர்நாகல்- கம்மம் இடையே சென்று கொண்டிருந்தது.

ரெயில் வேகமாக சென்றதாலும், மற்ற பயணிகள் தூங்கி கொண்டிருந்ததாலும் பிங்கி தேவியின் அலறல் சத்தம் கேட்கவில்லை. இதனால் அவர் கழிவறையிலேயே குழந்தை பெற்றெடுத்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அப்போது கழிவறையை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள், பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போன் மூலம் ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் கம்மம் ரெயில் நிலையத்துக்கு வந்ததும், பிங்கி தேவி, குழந்தையை ரெயில்வே போலீசார் மற்றும் குழந்தை உதவி மையத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு தாய்-குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ரெயிலில் குழந்தை பெற்றதால் தனது குழந்தைக்கு ரெயிலின் பெயரை வைக்க விரும்புவதாக பிங்கி தேவி தெரிவித்தார்.
Tags:    

Similar News