ஆன்மிகம்
அனந்தசயன கோலத்தில் கோட்டை மாரியம்மன்

மாசித்திருவிழா தெப்ப உற்சவம்: அனந்தசயன கோலத்தில் கோட்டை மாரியம்மன்

Published On 2021-03-03 04:41 GMT   |   Update On 2021-03-03 04:41 GMT
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று அம்மனின் தெப்ப உற்சவம் நடந்தது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா, கடந்த மாதம் 11-ந் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், ஊஞ்சல் உற்சவம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தது. மாசித்திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று அம்மனின் தெப்ப உற்சவம் நடந்தது.

இதையொட்டி காலை 10.30 மணி அளவில் அம்மனுக்கு பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் மகாஅபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி கோவில் கருவறை முன்பு 8 அடி நீளம், 8 அடி அகலம், ஒன்றரை அடி ஆழத்தில் புதிய தெப்பம் ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த தெப்பத்தில் தாமரை, மல்லிகை, மரிக்கொழுந்து போன்ற மலர்கள் மிதக்க, அதில் அனந்தசயன கோலத்தில் கோட்டைமாரியம்மன் இருப்பது போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அத்தகைய அம்மனின் அனந்தசயன கோலம் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மாசித்திருவிழாவின் நிறைவு நாள் என்பதால் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News