செய்திகள்

புல்வாமா தாக்குதல் - முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

Published On 2019-03-11 06:48 GMT   |   Update On 2019-03-11 06:48 GMT
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டான். #PulwamaAttack

புல்வாம:

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் 3 முக்கிய முகாம்களை அழித்தது. இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம் ஏற்பட்டது.

பாகிஸ்தானிடம் இந்திய வீரர் அபிநந்தன் சிக்க நேரிட்டதால் போர் ஏற்படாமல் சுமூக நிலை உருவானது. இதற்கிடையே புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தினார்கள்.

கடந்த 3 வாரங்களில் நடந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியைச் சேர்ந்த அகமது கான் (வயது23) என்று தெரிய வந்தது.

அகமதுகான் கடந்த 2017-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளான். எலக்ட்ரிசியனான இவனுக்கும் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஆதில் அகமதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருவரும் நண்பர்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் அவர்கள் இருவரும் ஏதோ சதி வேலைகளில் ஈடுபட போகிறார்கள் என்பதை தேசிய புலனாய்வு குழு கண்டறிந்து இருந்தது. பிப்ரவரி 27-ந்தேதி அகமது கான் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

அன்று முதல் அகமதுகான் தலைமறைவாகி விட்டான். அவனை தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் தேடி வந்தனர். இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு இவன்தான் மூளையாக செயல்பட்டவன் என்பதால் அவனை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.

நேற்று புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிரால் பகுதியில் உள்ள பிங்கிலீஸ் என்ற இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.

இதனால் பயங்கரவாதிகள் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்தது.

இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த 3 பயங்கரவாதிகளும் யார் என்பது முதலில் தெரியாமல் இருந்தது. இதுகுறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவன் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அகமது கான் என்று தெரிய வந்துள்ளது. இவனுக்கு முகமதுபாய் என்ற பெயரும் உண்டு.

கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளின் உடல்களும் துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முக்கிய பயங்கரவாதியான அகமதுகானை புல்வாமா மாவட்டத்தில் நிறைய பேருக்கு தெரியாது. எனவே செத்தது அவன்தானா? என்பது பற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #PulwamaAttack

Tags:    

Similar News