செய்திகள்
தங்கம்

ஜனவரி முதல் மார்ச் வரை தங்கத்தின் விற்பனை 37 சதவீதம் அதிகரிப்பு

Published On 2021-04-30 09:10 GMT   |   Update On 2021-04-30 09:10 GMT
ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 37 சதவீதம் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தா:

இந்தியாவில் தங்கத்தின் விற்பனை மற்றும் பயன்பாடு பொருளாதாரத்தில் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது.

இதனால் தங்கத்தின் விற்பனை சரிந்தது. மேலும் தங்கத்தின் மீது அதிக முதலீடுகள் குவிந்ததால் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. சில மாதங்கள் கழித்து கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டதையடுத்து தங்கம் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 37 சதவீதம் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தங்கத்தின் தேவை 140 டன்களாக இருந்தது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 102 டன்களாக இருந்தது.

தற்போதைய முதல் காலாண்டில் நகைகளின் தேவை 39 சதவீதமாகவும், உலக தங்க கவுன்சில் வெளியிட்ட தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் முதலீடு, தங்க பிஸ்கட், பார்கள் தேவை 34 சதவீதமாகவும் உயர்ந்தது.

இந்த காலாண்டில் இந்தியாவுக்கு 301 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இறக்குமதி (83.1 டன்) செய்யப்பட்டதை விட 3.5 மடங்கு அதிகமாகும். நகைக்கடைக்காரர்களின் தேவை அதிகரித்ததால் தங்க இறக்குமதி உயர்ந்தது.

ஆனால் தற்போது கொரோனா 2-வது அலை பரவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தங்கம் விற்பனை மீண்டும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உலக தங்க கவுன்சிலின் இந்திய பிரிவு இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது:-

தற்போதைய சூழலில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் திருமணங்களுக்காக தங்கத்தின் தேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.



அடுத்த 8 வாரங்கள் மிகவும் முக்கியமானது. கொரோனா பாதிப்புகள் குறைந்ததும் தடுப்பூசி செலுத்தப்படும் பணி தீவிரமாகும் பட்சத்தில் நுகர்வோர்களின் நம்பிக்கையுடன் தங்கத்தை வாங்குவர்.

இது போன்று நடந்தால் வருகிற 3-வது மற்றும் 4-வது காலாண்டில் கடந்த ஆண்டை விட தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்றார்.

Tags:    

Similar News