ஆன்மிகம்
முருகன்

ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது

Published On 2021-03-19 06:13 GMT   |   Update On 2021-03-19 06:13 GMT
ராமேசுவரம் கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் இந்த ஆண்டின் பங்குனி உத்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
ராமேசுவரம் கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் இந்த ஆண்டின் பங்குனி உத்திர திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முருகப்பெருமானுக்கு காப்பு கட்டப்பட்டு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

அப்போது ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்டனர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந் தேதி காலையில் இருந்தே ராமேசுவரம் நடராஜபுரம், புதுரோடு, ராமகிருஷ்ணாபுரம், சம்பை, மாங்காடு, கந்தமாதனபர்வதம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பறவைக் காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல விதமான காவடிகள் எடுத்து வந்து பால்குடம் சுமந்து வந்து முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

பங்குனி உத்திர திருவிழா தொடங்கி உள்ளதை தொடர்ந்து ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோவிலில் வருகிற 30-ந் தேதி வரையிலும் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
Tags:    

Similar News