செய்திகள்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து கே.எல். ராகுல் விலகல்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையுடன் இருந்த கே.எல். ராகுல், முதல் டெஸ்டில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 3-0 என அபார வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளைமறுதினம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடக்கிறது. இந்த டெஸ்டில் இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
டி20 தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி அசத்திய கே.எல். ராகுல் டெஸ்ட் போட்டியிலும் அசத்த காத்திருந்தார். ஆனால், தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கான்பூர் டெஸ்டில் பங்கேற்கமாட்டார் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்கள் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது.