செய்திகள்
குடிநீர் சப்ளை விவரம்-இணையதளத்தில் தகவல் அறிய ஏற்பாடு
குறிப்பிட்டவாறு குடிநீர் சப்ளை இல்லை எனில் உரிய மண்டல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பகுதி வாரியாக மேல்நிலைத்தொட்டி அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்தநிலையில் வீடு மற்றும் வர்த்தக இணைப்புகளில் குடிநீர் வினியோகிக்கப்படும் நாள், நேரம் குறித்து எந்த விவரங்களும் வெளிப்படையாக இருப்பதில்லை.பகுதி வாரியான குடிநீர் ஆபரேட்டர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கிடைக்கப்பெறும் குடிநீரை தங்கள் வினியோகப்பகுதிக்கு திறந்துவிடுவது வழக்கம். இதனால் குடிநீர் சப்ளையில் சீரான நிலை இருப்பதில்லை.
இது சில சமயங்களில் தவறு தலாகவும் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுவதும் வாடிக்கையாக உள்ளது. சில ஆபரேட்டர்கள் தங்கள் இஷ்டம் போல் தண்ணீர் திறந்துவிடும் நிலை காணப்பட்டது.இதற்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி மாநகராட்சி இணையதளத்தில் பகுதிவாரியாக குடிநீர் சப்ளை செய்யும் விவரங்கள் தேதி வாரியாக பதிவேற்றம் செய்து வெளியிட உத்தரவிட்டார்.
அதன்படி வரும் 30-ந்தேதி வரை நான்கு மண்டலங்களிலும் தினசரி குடிநீர் சப்ளை செய்யப்படும் பகுதி குறித்த விவரம் பதிவேற்றப்பட்டுள்ளது. மாநகராட்சியின் https://www.tnurban.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தேதி வாரியாக குடிநீர் சப்ளை செய்யப்படும் பகுதி குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். அதில் குறிப்பிட்டவாறு குடிநீர் சப்ளை இல்லை எனில் உரிய மண்டல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.