செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கிய போது எடுத்த படம்.

தர்மபுரி, பாலக்கோட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

Published On 2021-02-20 10:12 GMT   |   Update On 2021-02-20 10:12 GMT
தர்மபுரி, பாலக்கோட்டில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சப்-கலெக்டர் பிரதாப், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி வரவேற்றார்.

விழாவில் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு 210 மாற்றுத்திறனாளிகளுக்கு செயலிகளுடன் கூடிய திறன்பேசி, 12 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கினார். விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, வேளாண்மை விற்பனை குழு துணைத்தலைவர் சிவப்பிரகாசம், கூட்டுறவு வங்கி தலைவர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 2,429 பயனாளிகளுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இதில் கலெக்டர் கார்த்திகா, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் நாகராஜன், ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், அரசு வக்கீல் செந்தில், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், விமலன், தாசில்தார் ராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News