செய்திகள்
மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட பீரோ திறந்து கிடந்ததை படத்தில் காணலாம்.

குளச்சல் அருகே மருத்துவ சிகிச்சைக்கு சென்றவரின் வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2020-10-18 10:01 GMT   |   Update On 2020-10-18 10:01 GMT
குளச்சல் அருகே மருத்துவ சிகிச்சைக்கு சென்றவரின் வீட்டில் கதவை உடைத்து பணம், நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குளச்சல்:

குளச்சல் அருகே மேற்கு நெய்யூரை சேர்ந்தவர் ஹரிகுமாரன் தம்பி (வயது 65). கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பிரபல பெயிண்ட் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்திற்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 6 தங்க வளையல்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், வங்கி பாஸ் புத்தகங்கள் திருட்டு போயிருந்தன. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து, உள்ளே புகுந்து நகை- பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News