செய்திகள்
போக்குவரத்து விதிமுறையை மீறிய 10 ஆம்னி பஸ்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
தொப்பூர் அருகே போக்குவரத்து விதிமுறையை மீறிய 10 ஆம்னி பஸ்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே உள்ள குறிஞ்சி நகர் சுங்கச்சாவடி பகுதியில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், தரணிதர், ராஜ்குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஒரு ஆம்னி பஸ்சை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது அருணாச்சல பிரதேச வெளிமாநில ஆம்னி பஸ் தமிழகத்திற்குள் சென்றுவர வருவதற்கான சாலை வரி செலுத்தாமல் இயங்கியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அந்த வழியாக வந்த சுமார் 10 ஆம்னி பஸ்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது போக்குவரத்து சாலை விதிமுறைகளை மீறி அதிக முகப்பு விளக்குகள் பயன்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 10 ஆம்னி பஸ்களுக்கும் தலா ரூ.2,500 வீதம் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். பின்னர் அந்த பஸ்களை அதிகாரிகள் விடுவித்தனர்.