செய்திகள்
ஈராக் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு இந்தியா கண்டனம்
ஈராக் நாட்டின் ஓட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துருக்கி துணை தூதர் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஈராக் நாட்டின் எர்பில் நகரில் நட்சத்திர ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று (ஜூலை 17) ஈராக் நாட்டுக்கான துருக்கி துணை தூதர் மற்றும் சக ஊழியர்கள் சென்றிருந்தனர். அப்போது, அந்த ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு துணை தூதர் மற்றும் அவருடன் வந்த சக ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் துணை தூதர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரவீஸ்குமார் கூறியதாவது:
இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்து விதமான பயங்கரவாத செயல்களுக்கும் முழு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஈராக்கில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரிய செயல். இத்தகைய பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து நீதியின் முன் நிறுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். மேலும், உயிரிழந்தவகளின் குடும்பங்களுக்கு இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.