ஆட்டோமொபைல்
ஓலா, உபெர் - கோப்புப்படம்

ஓலா, உபெர் நிறுவனங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல்

Published On 2019-08-01 11:09 GMT   |   Update On 2019-08-01 11:09 GMT
ஓலா மற்றும் உபெர் போன்ற கால்டாக்சி நிறுவனங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



ஓலா, உபெர் போன்ற கால்டாக்சி நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சட்ட மாணவர் நிபுன் சக்சேனா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மொபைல் போன் செயலி மூலம் இயங்கும் தனியார் வாடகை கார் நிறுவனங்களான ஓலா, உபெர் போன்றவற்றில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இந்த நிறுவனங்கள் டிரைவர்களை பணியில் அமர்த்துகின்றன. அத்தகைய டிரைவர்களால் பெண்கள் மானபங்கம், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு அவ்வப்போது ஆளாகுகின்றனர்.



எனவே இந்த நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும். பிரிட்டன் தலைநகர் லண்டனில் உபெர் வாடகை கார்களை இயக்க அந்நாடு தடை செய்துள்ளது. உபெர் நிறுவனத்தின் டிரைவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை அடுத்து, இந்த முடிவுக்கு அந்த நாடு வந்துள்ளது. எனவே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மத்திய சாலை போக்குவரத்து துறை இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News