உள்ளூர் செய்திகள்
விஜயநகரப் பேரரசர் மன்னர் திருமலை நாயக்கரின் 439 ஆவது ஜெயந்தி விழா
டெல்லி சுல்தான் மற்றும் முகலாய மன்னர்கள் படையெடுப்புகளை சாதுரியமாக முறியடித்து வரலாற்றுப் பக்கங்களில் திருமலை நாயக்கர் மகத்தான இடத்தை பெற்றுள்ளார்.
மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த விஜயநகரப் பேரரசர்களில் ஆகச்சிறந்த இடத்தைப் பெற்றவர் மாமன்னர் திருமலை நாயக்கர். கி.பி. 1623 முதல் 1659 ஆம் ஆண்டு வரை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்கள் ஆளுகைக்கு கீழ் அனைத்துப் பகுதிகளையும் கட்டிக்காத்த பெருமைக்கு சொந்தக்காரர்.
டெல்லி சுல்தான் மற்றும் முகலாய மன்னர்கள் படையெடுப்புகளை சாதுரியமாக முறியடித்து வரலாற்றுப் பக்கங்களில் திருமலை நாயக்கர் மகத்தான இடத்தை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஆண்டுதோறும் திருமலை நாயக்கரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது அவரின் 439 ஆவது ஜெயந்தி விழா தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை சார்பில் மதுரை திருமலை நாயக்கர் மகாலில் நடைபெற்ற விழாவில் வரலாற்று சிறப்புமிக்க சந்திர வம்சத்து சத்ரிய குல முறைப்படி மாமன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு மாமன்னர் தர்பார் அரங்கில் இருந்து வேத பாராயணம் முழங்க மங்கள இசையுடன் சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. பின்னர் பால், சந்தன அபிஷேகம் செய்தனர்.
குறிப்பாக பண்டைய கால முறைப்படி மன்னர்களுக்கு வழங்கப்படும் மரியாதைகள் செய்யப்பட்டு மாமன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேரவை தலைவர் வக்கீல் செந்தில்குமார் நாயுடு தலைமையில் நடந்த ஜெயந்தி விழாவில் பொதுச் செயலாளர் வெங்கடேசன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் ராஜசேகர், துணை பொதுச்செயலாளர் ராமணன், மாநில கொள்கைபரப்பு செயலாளர் ஹேராம் துளசிராமன், திருச்சி மாவட்ட செயலாளர் மகேஷ்கண்ணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நாயுடு இனமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.
ஜெயந்தி விழாவில் தமிழ்வழி நாயுடு மக்கள் பேரவை தலைவர் வக்கீல் செந்தில் குமார் நாயுடு தலைமையில் மன்னர் திருமலை நாயக்கருக்கு மரியாதை செலுத்த சீர்வரிசை பொருட்கள் எடுத்து வந்த காட்சி.