ஆன்மிகம்
கருவூரார் சித்தர்

சிவனையே நடுங்க வைத்த சித்தர்

Published On 2019-11-28 09:04 GMT   |   Update On 2019-11-28 09:04 GMT
கருவூர்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்ததால் பிறந்த ஊரோடு இணைத்து கருவூரார் என அழைக்கப்படுகிறார்.
கருவூர்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்ததால் பிறந்த ஊரோடு இணைத்து கருவூரார் என அழைக்கப்படுகிறார். இவரது இயற்பெயர் என்ன என்பது தெரியவில்லை. இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ச்சி பெற்ற கருவூரார், யோக சித்திகள் கைவரப் பெற்றவர். போகரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றவர்.

எண்ணற்ற பல அற்புதங்களை இவர் செய்திருக்கிறார். கொங்கு தேசம், வடநாடு, தொண்டைநாடு, நடுநாடு முதலிய இடங்களில் உள்ள தலங்களைத் தரிசித்துக் கொண்டு, தென்பாண்டிநாட்டுத் திருப்புடைமருதூர் சென்று, இறைவனிடம் இவர் திருவடிதீட்சை பெற்றார். இவர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றார். அப்போது நிவேதன காலம். இவர், இறைவனை "நெல்லையப்பா" என்று மூன்று முறை அழைத்தும் இறைவனின் தரிசனம் கிடைக்கவில்லை. “அட, இங்கே நெல்லையப்பன் இல்லையாப்பா?” என்று இவர் நகைப்புடன் கூறவும், சுற்றி எருக்கும், வேண்டாத புல் பூண்டுகளும் முளைத்துக் கோவிலை மறைத்து நின்றன.

அங்கிருந்து திரும்பி பாராமல் நடந்தார் சித்தர், சித்தரின் கோபம் சிவனையும் நடுங்க வைத்தது. கருவூரார் மானூரை அடையும்போது நெல்லையப்பர் வழிமறித்து, சித்தரை சமரசம் செய்து நெல்லைக்கு அழைத்தார். கருவூரார் சமாதானமாகி நெல்லை நோக்கி நடக்கலானார். அவர் எடுத்துவைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொற்காசு என்று கணக்கிட்டு இறைவன் வழங்கியதாக கூறப்படுகிறது.

முதலாம் ராஜராஜசோழன் (கி.பி. 985-1014) தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தியபோது, இறுகாமல் இளகிக் கொண்டிருந்தது. அதை கண்ட அரசன் வருந்தினான். அதனை அறிந்த போகமுனிவர் கருவூராரை தஞ்சைக்கு அனுப்பி அஷ்டபந்தன மருந்தை இறுகும்படி செய்தருளினார். இவரை கருவூர் மக்கள் சிலர் வைதிக ஒழுக்கம் தவறியவர் என்று பழிச்சொல் சாற்றி தொல்லைகள் பல தந்தனர்.

இதனால், அவர்களுக்குப் பயந்தவர் போல நடித்து, ஆனிலை ஆலயத்தை அடைந்து, பெருமானைத் தழுவிக்கொண்டார் என்பது புராண வரலாறு. இவரின் திருவுருவச்சிலை கருவூர் பசுபதீஸ்வரர் கோவிலிலும், தஞ்சை பெரிய கோவிலிலும் உள்ளது.
Tags:    

Similar News