செய்திகள்
ராயப்பேட்டையில் 110 கிலோ குட்காவுடன் 5 பேர் கைது
ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே வாகன சோதனையில் 110 கிலோ குட்காவுடன் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதையொட்டி நகரில் கடந்த 2 நாட்களாக வாகன சோதனை தீவிரமாக இருந்து வருகிறது. அதன்படி சென்னை அண்ணாசாலை போலீசார் நேற்று அதிகாலை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார்சைக்கிளில் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில், 4 மோட்டார்சைக்கிள்களில் சந்தேகத்துக்கு இடமாக வந்த 5 பேரை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அதில், அவர்களிடம் 110 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தன. அதை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரை சேர்ந்த சுரேஷ் (வயது 52), அம்மையப்பன் தெருவைச் சேர்ந்த ஜெகந்நாதன் (62), திருவல்லிக்கேணி சின்னப்பா தெருவை சேர்ந்த மோகன் (54), அய்யாபிள்ளை தெருவை சேர்ந்த சுப்பிரமணி (35), சுபத்திரா தெருவை சேர்ந்த முகமது அக்பர் (28) என்பது தெரியவந்தது. அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார்சைக்கிள்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.