செய்திகள்
கோப்புப்படம்

நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட இலவச ரேஷன் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Published On 2021-06-23 20:30 GMT   |   Update On 2021-06-23 20:30 GMT
கொரோனா பாதிப்பு மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு போன்றவற்றால் நாடு முழுவதும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
புதுடெல்லி:

கொரோனா 2-வது அலை காரணமாக மாநிலங்கள் தனித்தனியாக பொது முடக்கத்தை அமல்படுத்தி உள்ளன. இதில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும், மொத்தமாக இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை.

கொரோனா பாதிப்பு மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு போன்றவற்றால் நாடு முழுவதும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே இந்த மக்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு திட்டம் தீட்டியது. குறிப்பாக உணவு இல்லாமல் எந்த நபரும் பாதிக்கப்படக்கூடாது என்பதை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது.

எனவே இதற்காக இலவச ரேஷன் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. குறிப்பாக 80 கோடிக்கும் மேற்பட்ட ஏழை, நடுத்தர பிரிவினருக்கு வருகிற நவம்பர் மாதம் வரை மாதம் 5 கிலோ உணவு தானியத்தை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதாவது பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தை தீபாவளி வரை நீட்டிப்பதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தை நவம்பர் மாதம் வரை நீட்டிப்பதற்கான பரிந்துரை வைக்கப்பட்டது.

இதற்கு மந்திரிசபை முழு ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து மத்திய அரசு பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் 5 மாதங்களுக்கு அதாவது ஜூலை முதல் நவம்பர் வரை நீட்டிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அடுத்த 5 மாதங்களுக்கு உணவு தானியம் இல்லால் எந்த ஏழையும் அவதிப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இது உதவும் எனவும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் 81.35 கோடி பயனாளிகள் இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள் எனவும், மாதந்தோறும் வழக்கமாக வழங்கப்படும் ரேஷனில் இருந்து கூடுதலாக நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவமாக கிடைக்கும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த திட்டத்துக்காக 204 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவைப்படும் எனவும், இதற்காக மத்திய அரசுக்கு ரூ.67,266.44 கோடி செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டு உள்ளது.

இதைப்போல இந்தியாவுக்கும், செயின்ட் வின்சென்ட் அன்ட் கிரெனாடின்ஸ் தீவுகளுக்கும் இடையேயான வரி தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

மேலும் மத்திய ரெயில்வே கிட்டங்கி நிறுவனம் மற்றும், மத்திய கிட்டங்கி கழகத்தை இணைப்பதற்கும் மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. பிரதமர் மோடியின் ‘குறைந்தபட்ச அரசு அதிகபட்ச நிர்வாகம்’ திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் மற்றொரு நடவடிக்கையாக இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News