களியக்காவிளை அருகே மகன் கல்லறையில் தந்தை தற்கொலை
நாகர்கோவில்:
களியக்காவிளை அருகே குருமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், (வயது 65). இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ராஜேந்திரன் மனைவி, மகன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். ராஜேந்திரனுடன் அவரது மூத்த மகன் ஷாஜி வசித்து வந்தார்.
கடந்த 18-ந்தேதி கேரளாவில் நடந்த சாலை விபத்தில் ஷாஜி பலியானார். இதையடுத்து அவரது உடல் பனைவிளை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. மகன் விபத்தில் பலியானதால் ராஜேந்திரன் மனம் உடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று மகன் கல்லறையின் அருகே ராஜேந்திரன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ராஜேந்திரன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து களியக்காவிளை இன்ஸ் பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகன் கல்லறையில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.