செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர் செல்வம்

ஈபிஎஸ் - ஓ.பி.எஸ். மே தின வாழ்த்து: நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அறிவிப்பு

Published On 2021-04-30 09:23 GMT   |   Update On 2021-04-30 09:23 GMT
தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாளில், தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த `மே தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை:

அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாளில், தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த `மே தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

`உழைக்கும் கைகளே உலகை உருவாக்கும் கைகள்’ என்று உலகம் உணர்ந்த இந்தத் திருநாளில், தங்களது தளர்வறியா உழைப்பின் மூலம் தமிழகத்தை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் எங்களது உளமார்ந்த `மே தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.


உழைப்போர் திருநாளாம் மே"தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கங்களில் இருந்தும், தேர்ந்தெடுக்கப்படும் நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும்.

தற்போது தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், நிதியுதவி வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News