ஆன்மிகம்
திருவண்ணாமலையில் 2-வது நாளாக வெறிச்சோடிய கிரிவலப்பாதை
கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் திருவண்ணாமலையில் நேற்று 2-வது நாளாகவும் பக்தர்கள் இல்லாமல் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மகாதீபத்தன்றும், அடுத்தநாள் பவுர்ணமியை முன்னிட்டும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மகா தீபத்தன்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவதற்கும், கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கார்த்திகைதீபம் ஏற்றப்பட்ட நேற்று முன்தினம் கிரிவலப்பாதையில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் கிரிவலம் செல்லாமல் தடுக்கும் வகையில் கிரிவலப் பாதையில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் வைத்து, கிரிவலம் சென்ற ஒருசில பக்தர்களையும் தடுத்து நிறுத்தி கிரிவலம் செல்ல அனுமதியில்லை என்று எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். இருப்பினும் சிலர் குறுக்கு சாலைகள் வழியாக கிரிவலப் பதையில் புகுந்து கிரிவலம் சென்றனர்.
கார்த்திகை தீபத்தையொட்டி வரும் பவுர்ணமி நேற்று முன்தினம் மதியம் 1.46 மணிக்கு தொடங்கி நேற்று மதியம் 2.23 வரை இருந்தது. பவுர்ணமி கிரிவலத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததால் 2-வது நாளாக நேற்றும் பக்தர்கள் இன்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. ஒருசிலர் மட்டும் நேற்று தனித்தனியாக கிரிவலம் சென்றனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை விசாரித்து அனுப்பினர். வெளியூர் பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் நேற்று பகலில் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.