செய்திகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

Published On 2021-09-09 10:28 GMT   |   Update On 2021-09-09 10:28 GMT
கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் சமய விழாக்கள் கொண்டாடுவதற்கான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் டாக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது:

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பொறுத்து தமிழகத்தில் எதிர்வரும் 15ந்தேதி வரை கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களுக்கு கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திவிழா பொது இடங்களில் கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 

மேலும் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி கிடையாது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே விழாவை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். 

தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. தனிநபர்கள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யும் சிலைகளை கோவில்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்துவிட்டும் செல்லலாம். 

இந்த சிலைகள் இந்துசமய அறநிலையத்துறையினரால் முறைப்படி அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தனிநபர்களை தவிர அமைப்புகளுக்கு இந்த செயல்பாடுகளில் ஈடுபட முழுவதுமாக தடை செய்யப்படுகிறது. 

விழாவுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் போது, பொதுமக்கள் தவறாது முககவசம் அணிவதோடு, சமூக இடை வெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 

இந்த நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News