உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் சந்தையை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக சந்தைகளை இடமாற்றம் செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவு பிறப்பித்தார். இதில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகில் செயல்பட்டு வந்த பூச்சந்தை காந்திநகர் பைபாஸ் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் காய்கறி சந்தையை இடமாற்றம் செய்து நகராட்சி அலுவலகம் முன்பும், ஈசானிய மைதானத்திலும், செங்கம் சாலையிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை கடலை கடை மூலை பகுதியில் உள்ள சாலையோரக் கடைகள் மற்றும் காய்கறி சந்தையை காலி செய்யும்படி அதிகாரிகள் தரப்பில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி விவசாயிகள் கூறும்போது நகரத்தில் ஜவுளிக் கடைகள் நகைக் கடைகள் ஆகியவை கொரோனா கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. அதேபோல் சந்தைகளும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் அதே இடங்களில் செயல்பட விதிவிலக்கு அளிக்க வேண்டும். நகருக்கு வெளியில் வியாபாரம் செய்தால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் வர மாட்டார்கள்.
இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றனர். அதனை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தொடர்ந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.