கொரோனாவில் இருந்து மீண்ட தேவேகவுடா
பெங்களூரு:
முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா தேவேகவுடா ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் கெரோனாவின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.
இதுகுறித்து தேவேகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
எனக்கும், எனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள விஷயம் தெரிந்த உடனேயே நீங்கள் (தொண்டர்கள்) காட்டிய அன்பு, அடைந்த ஆதங்கம், செலுத்திய அக்கறை, வேகமாக குணம் அடைந்து வாருங்கள் என்று நீங்கள் கூறிய அந்த வாழ்த்துக்கள் என்னை வெகுவாக கவர்ந்தது. இதனால் நாங்கள் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்துள்ளோம்.
நாங்கள் குணம் அடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் எனது உடல்நிலை குறித்து யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. உங்களின் அன்பு எப்போதும் இப்படியே இருக்கட்டும். நான் மீண்டும் பொதுவாழ்க்கைக்கு திரும்புகிறேன். அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்.
இவ்வாறு தேவேகவுடா தெரிவித்துள்ளார்.