உள்ளூர் செய்திகள்
உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாத்தவர் நரேந்திரமோடி- கவர்னர் தமிழிசை பேச்சு
அந்நிய முதலீடு, வர்த்தகத்தை தடுத்து உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாத்தவர் நரேந்திரமோடி என கவர்னர் தமிழிசை பேசினார்.
புதுச்சேரி:
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் 39-வது வணிகர் தின விழா புதுவை ரோடியர் மில் திடலில் நடந்தது.
கவர்னர் தமிழிசை ஆண்டுவிழா மலரை வெளியிட்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
ஆங்கிலேயர் அடக்குமுறை இருந்த காலத்தில் பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட போராளிகள் புதுவைக்குத்தான் வந்தனர். ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சி நாதன் புதுவையில்தான் பயிற்சி எடுத்தார்.
நமக்கெல்லாம் ஒரு பிரச்சினை வரும் போது தாய்மடியை தேடிச்செல்வோம். அதுபோல புதுவை தாய்மடியாக திகழ்கிறது. எளிய மக்களை தாங்கிப் பிடிப்பவர்கள் சிறு வணிகர்கள்தான்.
அந்நிய முதலீடு, வர்த்தகம் ஆகியவற்றை தடுத்து நிறுத்திய பெருமை பிரதமர் மோடியை சாரும். பிரதமர் மோடி உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாத்தவர்.
குடும்பத்துக்கு ஒரு டாக்டர் இருப்பதுபோல தெருவுக்கு ஒரு சிறு வணிகர் இருக்க வேண்டும். அவர்கள் நம் குடும்பத்தை பற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். கொரோனா காலத்தில் ஊரடங்கை அமல்படுத்தாமல் சிறு வணிகர்களை புதுவை அரசு பாதுகாத்தது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வெங்கடேசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.