செய்திகள்
பேரளம் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
பேரளம் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நன்னிலம்:
பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் பேரளம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பண்டாரவாடை அருகே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். பின்னர் அதில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அம்பகரத்தூர் பகுதியை சேர்ந்த காளிதாஸ்(வயது 34) என்பதும், சாராயம் கடத்தி வந்து விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து காளிதாசை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருமீயச்சூர் பகுதிகளில் சாராயம் விற்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சரண்யா(30), கோவில்திருமாளம் பகுதியை சேர்ந்த சுமதி(54) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரண்யா, சுமதி ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 220 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.