செய்திகள்
சசிகலா

சசிகலா சென்னை திரும்பும் தேதியில் மாற்றம்- டிடிவி தினகரன் அறிவிப்பு

Published On 2021-02-04 09:19 GMT   |   Update On 2021-02-04 09:19 GMT
பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் சசிகலா சென்னை திரும்பும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா கொரோனா தொற்று காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கொரோனா பாதிப்பு குணமானதை தொடர்ந்து சுகாதாரத்துறை அறிவுரைப்படி அவர் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் சசிகலாவை அவரது உறவினர்கள் கவனித்துக் கொள்கின்றனர். சொகுசு விடுதியில் சசிகலா உறவினர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் சசிகலாவின் ஒரு வார தனிமை வருகிற 6-ந்தேதி நிறைவடைகிறது. இதையடுத்து சசிகலா வருகிற 7-ந்தேதி சென்னை திரும்புகிறார். அன்று காலை 7.30 அளவில் சசிகலா பெங்களூருவில் இருந்து புறப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சசிகலா புறப்படும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 7ம் தேதிக்கு பதில், 8ம் தேதி காலை 9 மணியளவில் சசிகலா பெங்களூருவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க பிரமாண்டமான ஏற்பாடுகளை டி.டி.வி. தினகரன் செய்துவருகிறார். ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சசிகலாவுக்கு அ.ம.மு.க. சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அந்தந்த மாவட்ட அ.ம.மு.க.வினர் இந்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News