செய்திகள்
21, 22-ந்தேதி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த உத்தரவு
மாணவர்களின் செயல்களை ஆராயும் வகையில், பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்த திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 9,10-ம்வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு பின் பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இயங்குகிறது
9 முதல் பிளஸ்-2 வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் செயல்களை ஆராயும் வகையில், பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்த திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு வரும் 21ந் தேதியும், 10-ம்வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு வரும் 22-ந்தேதியும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சமக்ரா சிக்ஷா மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பள்ளிகளை ஆய்வு செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.