செய்திகள்
கும்பகோணம் ரெயில் நிலையத்தில் தவறவிட்ட நகை-பணத்தை பயணியிடம் ஒப்படைத்த போலீசார்
கும்பகோணம் ரெயில் நிலையத்தில் தவறவிட்ட நகை-பணத்தை பயணியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் ரெயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு தஞ்சாவூர் - சென்னை உழவன் விரைவு ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது ரெயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் கைப்பை ஒன்று கிடந்தது.
அப்போது அங்கு பணியில் இருந்த கும்பகோணம் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் அந்த பையை எடுத்து சோதனை செய்தார். . அப்போது அந்த பையில் 3 பவுன் நகையும், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.5,200, விசிட்டிங் கார்டு உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிவராமன் பையில் இருந்த விசிட்டிங் கார்டில் உள்ள செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தொலைபேசியில் பேசியவர் அந்த கைப்பை தன்னுடையது தான் என்றும், கும்பகோணம் பகுதியில் நவக்கிரக கோவிலுக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னைக்கு செல்ல கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வந்தபோது அங்கு கைப்பையை தவற விட்டுள்ளதாகவும் கூறினார்.
தகவல் அறிந்ததும் அவர் மயிலாடுதுறையில் ரெயிலில் இருந்து இறங்கி கார் மூலம் கும்பகோணம் வந்தார். அங்கு அவர் தவறவிட்ட கைப்பையை போலீசார் ஒப்படைத்தனர். அதனை பெற்று கொண்டு அந்த பயணி மீண்டும் சென்னை சென்றார்.