செய்திகள்
பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை - அண்ணாமலையிடம் டீமா மனு
பதுக்கல் காரணமாக பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நூல் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் உட்பட சங்க நிர்வாகிகள், பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலையை கோவையில் சந்தித்தனர். பின்னலாடை துறை சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர். மேலும் டீமா சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
பதுக்கல் காரணமாக பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நூல் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிரதான மூலப்பொருள் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. புதிய ஆர்டர்களை பெற முடிவதில்லை.
ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு ஆடை தயாரிப்பதும் சிக்கலாகிறது. இந்திய பருத்தி கழகம், வர்த்தகர்களுக்கு பஞ்சு வழங்க கூடாது. பஞ்சு மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும்.
பின்னலாடை துறையினரின் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று நிறைவேற்றித்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.