குலசேகரத்தில் சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் கண்டன பொதுகூட்டம்
திருவட்டார்:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைதை கண்டித்து குலசேகரம் அரசமூடு சந்திப்பில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கான்ஸ்டன் கிளிட்டஸ், கிழக்கு வட்டார தலைவர் ஜெகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.
குலசேகரம் நகர தலைவர் விமல் ஷெர்லின் சிங் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக வசந்தகுமார் எம்.பி.கலந்து கொண்டார். அவர் பேசும்போது, நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் தவறான பொருளாதார கொள்கையால் இன்று பல்வேறு கம்பெனிகள் மூடப்பட்டு வருகிறது. இதனால் படித்த இளைஞர்கள் வேலை இழந்து வருகிறார்கள், என்றார்.
ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:- ஆட்டோ மொபைல் துறையில் பணி புரியும் பல்வேறு தொழிலாளர்கள் வேலை இல்லாமல் போனதற்கு மத்திய நிதி மந்திரியே காரணம். காங்கிரஸ் ஆட்சியில் தான் ரூ.76 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அப்போதைய நிதி மந்திரி சிதம்பரம் நடத்தி காட்டினார். இப்போது அவரை அரசியலுக்காக கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்கு உரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில பொது குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட துணை தலைவர் ராஜரத்தினம், மாவட்ட செயலாளர்கள் ஜான் இக்னேசியஸ், ஐ.ஜி.பி. லாரன்ஸ், மாவட்ட வக்கீல் அணி தலைவர் ஏசுராஜா, அயக்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வினுட்ராய், வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் பினிஷ், வட்டார துணை தலைவர் ஹமாருதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.