ஆட்டோமொபைல்
2020 ஹோண்டா சிட்டி வெளியீட்டு விவரம்
ஹோண்டா நிறுவனத்தின் 2020 செடான் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் காரின் விற்பனை கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தாமதமாகி வருகிறது. நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக வணிக நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனமும் விற்பனையாகவில்லை.
இதுபோன்ற சூழ்நிலைகளால் தொடர்ந்து ஹோண்டா சிட்டி விற்பனை தாமதமாகி வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு நிறைவுற்றதும் ஹோண்டா சிட்டி விற்பனை துவங்கும் என தெரியவந்துள்ளது.
புதிய கார் வெளியீட்டை வேண்டுமென்றே தாமதப்படுத்தவில்லை. வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டதும், அதற்கான அறிவிப்பு வெளியாகிவிடும் என ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தெரிவித்தார்.
முன்னதாக வெளியான தகவல்களில் புதிய சிட்டி மாடல் பெட்ரோல் என்ஜின் மட்டுமே கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், இவற்றை முற்றிலும் மறுக்கும் வகையில் 2020 ஹோண்டா சிட்டி மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.