செய்திகள்
சேதுபாவாசத்திரம் அருகே கார் மோதி மீனவர் பலி
சேதுபாவாசத்திரம் அருகே கார் மோதி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அடுத்த புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலன் (வயது55) மீனவர்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது பேரன் பரத்துடன் (13) மோட்டார் சைக்கிளில் அதிராம்பட்டினம் சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கொள்ளுக்காடு கடைவீதி அருகே வந்த போது எதிரில் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற கார் பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த பாஞ்சாலன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சேதுபாவாசத்திரம் போலீசார் விரைந்து வந்து பாஞ்சாலன் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த பரத் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.