செய்திகள்
டெல்லியில் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. நேற்று 273 பேர் பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், டெல்லியில் சரோஜ் மருத்துவமனையில் பணியாற்றும் 80 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவர்களில் 12 பேர் மருத்துவமனையிலும், மீதி பேர் வீட்டிலும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். எனினும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணரான ஏ.கே. ராவத் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளார். 27 ஆண்டு கால சேவையாற்றிய அவரது மறைவு மற்ற மருத்துவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் பணியாற்றிய 26 வயதுடைய மருத்துவர் அனாஸ் முஜாகித் தொற்று உறுதி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே நேற்று உயிரிழந்துள்ளார். மிக இளம் வயதில் அவர் உயிரிழந்து உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் இதுவரை மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.