செய்திகள்
விக்கெட் எடுத்த உற்சாகத்தில் இந்திய வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா

Published On 2021-03-06 10:45 GMT   |   Update On 2021-03-06 10:45 GMT
ஜோ ரூட், டான் லாரன்ஸ் ஆகியோர் சற்று தாக்குப்பிடித்து விக்கெட்டை காப்பாற்ற போராடினர். எனினும் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.
அகமதாபாத்:

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களில் சுருண்டது. 

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. ரிஷப் பண்ட் (101) வாஷிங்டன் சுந்தர் (96 அவுட் இல்லை) ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலுவான அடித்தளம் அமைத்தனர். இதனால் இந்திய அணி 365 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 2ம் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே இந்திய சுழற்பந்துவீச்சில் தடுமாறியது. 65 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஜோ ரூட், டான் லாரன்ஸ் ஆகியோர் சற்று தாக்குப்பிடித்து விக்கெட்டை காப்பாற்ற போராடினர். எனினும் அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. ஜோ ரூட் 30 ரன்களில் வெளியேறினார். கடைசி வரை போராடிய டான் லாரன்ஸ் 50 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 135 ரன்களில் சுருண்டது.

இதன்மூலம் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இந்தியா கைப்பற்றியது. இரண்டாம் இன்னிங்சில் அக்சர் பட்டேல், அஷ்வின் இருவரும் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News