செய்திகள்
குடிநீரை விலைக்கு வாங்கி விநியோகிக்கும் ஊராட்சிகள்
ஒவ்வொரு ஊராட்சியும் லட்சக்கணக்கான ரூபாய் கடனில் மூழ்கியுள்ளன. கடன் தொகையை செலுத்த முடியாமல் திக்குமுக்காடி வருகின்றன.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. 265 ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை ஊராட்சிகள் அதிகபட்ச விலைக்கு வாங்கி வழங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் வழங்கும் மானிய விலை குடிநீர் பற்றாக்குறையாக இருக்கிறது. ஊராட்சிகளுக்கு மூன்றாவது குடிநீர் திட்டத்தில் ஆயிரம் லிட்டர் ரூ.8.42 என்ற கட்டணத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் மக்கள்தொகை அதிகம் என்பதால் ஆயிரம் லிட்டர் ரூ.27.35 என்ற விலைக்கு வாங்கி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஊராட்சியும் லட்சக்கணக்கான ரூபாய் கடனில் மூழ்கியுள்ளன. கடன் தொகையை செலுத்த முடியாமல் திக்குமுக்காடி வருகின்றன.
எனவே தமிழக அரசும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் கடனில் மூழ்கும் திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளை கரை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவது குடிநீர் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டுமென ஊராட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.