செய்திகள்
நாடு முழுவதும் 25 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்... போக்குவரத்து, வங்கிப் பணிகள் பாதிப்பு
மத்திய அரசின் கொள்கைகயை கண்டித்து நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்தில் சுமார் 25 கோடி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி:
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், புதிய தொழிலாளர் கொள்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு எதிராக 10 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய மற்றும் மாநில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 25 கோடி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மார்க்கெட்டுகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
வங்கி பணியாளர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், வங்கிகளுக்கான இருப்பு தொகைக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும், அதற்கான சேவை கட்டணங்களை குறைக்க வேண்டும், போதிய பணியமர்த்தல், வங்கி தனியார் மய எதிர்ப்பு மற்றும் ஒப்பந்த நடைமுறை எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர், எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து மற்றும் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொச்சியில் மார்க்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன. பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் போராட்டங்களுக்கு தடை விதிக்கும் வகையில், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை அரசு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.