செய்திகள்
கோவில் விழாவையொட்டி வெடி வெடித்து - சிறுவன் பலி
உப்பிலியாபுரம் அருகே கோவில் விழாவையொட்டி ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவன் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்பிலியபுரம்:
கரூர் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் லோகநாதன். இவர், மத்திய சேம காவல் படையில் காவலராக பணி புரிந்து வருகிறார். இவர், அங்கிருந்து மனைவி சுதா, மகன் சசிதரன்(வயது 7), சுதாவின் தங்கை ஆகியோருடன் வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உன்ள எஸ்.என்.புதூருக்கு ஆட்டோவில் வந்தார். அப்போது அந்த வீட்டின் அருகே புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள பள்ளி அருகே வெடி வெடிக்கப்பட்டது. அப்போது ஆட்டோவின் மேல் அமர்திருந்த சிறுவன் சசிதரன் மீது வெடி ஒன்று விழுந்து வெடித்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சசிதரை துறையூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான். பின்னர் இறந்த சசிதரன் உடலை அவனது உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்று விட்டனர்.
இந்த வெடி விபத்து குறித்து முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பரமத்தி வேலூருக்கும் சென்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெடி விபத்தில் உயிரிழந்த சிறுவன் அவனது பெற்றோருக்கு ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது.