ஆன்மிகம்
விநாயகர்

விநாயகரின் அறுபடை வீடும்.. வழிபட்டால் தீரும் பிரச்சனைகளும்...

Published On 2021-09-16 07:01 GMT   |   Update On 2021-09-16 07:01 GMT
விநாயக பெருமானின் அறுபடை வீடுகள் அதில் இருந்து மாறுபட்டு நமது வாழ்வுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் தரும் வகையில் அமைந்துள்ளன.
முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருக்கின்றன. முருகன் அறுபடை வீடுகள் அவரது அவதாரத்தின் நிகழ்வுகளையும், அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களையும் சொல்வதுபோல அமைந்துள்ளது. ஆனால் விநாயக பெருமானின் அறுபடை வீடுகள் அதில் இருந்து மாறுபட்டு நமது வாழ்வுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் தரும் வகையில் அமைந்துள்ளன.

விநாயகர் வீற்றிருக்கும் எத்தனையோ ஆயிரக்கணக்கான தலங்களில் ஆறே ஆறு தலங்கள் மிகவும் தனித்துவம் கொண்டது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆறு தலங்கள் தான் விநாயகரின் அறுபடை வீடுகளாக உள்ளன.

திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடையூர், மதுரை, பிள்ளையார்பட்டி, திருநாரையூர் ஆகிய 6 தலங்கள்தான் விநாயகரின் அறுபடை வீடுகளாக உள்ளன.


திருவண்ணாமலை தலத்தில் ராஜகோபுரத்தில் உள்ள செல்வ கணபதி விநாயகரின் முதல் படை வீடாக கருதப்படுகிறது. இவரை வழிபட்டால் அல்லல்கள் அனைத்தும் கரைந்தோடி விடும் என்பது ஐதீகமாகும்.

விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஆழத்து பிள்ளையார் 2-வது படை வீடாக உள்ளார். காசிக்கு சமமான இந்த தலத்தில் விநாயகரை வழிபட்டால் நம் வாழ்வுக்கு தேவையான அனைத்து செல்வங்களும் கிடைக்கும். திருக்கடையூர் அன்னை அபிராமி ஆலயத்தில் அமிர்தகடேஸ்வரர் சன்னதி அருகே கள்ளவாரண பிள்ளையார் சன்னதி உள்ளது. இவர்தான் 3-வது படை வீடாக கருதப்படுகிறார். இவரை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் சித்தி விநாயகர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இவர் அறுபடை வீடுகளில் 4-வதாக இருக்கிறார். இவரை வழிபட்டால் நாம் வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும் என்பது ஐதீகமாகும்.

புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி தலம் 5-வது படை வீடாக திகழ்கிறது. அங்குள்ள தீட்சா கணபதி படை வீடுகளில் ஒருவராக உள்ளார். அவரை வழிபட ஞானம் கிடைக்கும். முக்கிய விஷயங்களில் எப்படி முடிவு எடுப்பது என்ற திணறல் ஏற்பட்டால் இவரை வழிபட்டாலோ அல்லது நினைத்து கொண்டாலோ நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.

இறுதியாக விநாயகரின் அறுபடை வீடுகளில் 6-வதாக திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லா பிள்ளையார் உள்ளார்.தேவார திருப்பதிகங்களை இந்த உலகுக்கு திருப்பி தந்தவர் என்ற மகிமை இவருக்கு உண்டு. இவரை வழிபட்டால் முக்தி தேடி வரும்.

ஆக விநாயகரின் அறுபடை வீடுகளை தரிசனம் செய்வதன் மூலம் அனைத்து நலன்களையும் நாம் பெற முடியும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அறுபடை வீடுகளுக்கு சென்று வரவேண்டும் என்ற ஆன்மீக சுற்றுப்பயணத் திட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது நிச்சயம் உங்கள் ஆத்ம பலத்துக்கு உதவி புரியும்.
Tags:    

Similar News