வழிபாடு
நாளை திறக்கப்பட உள்ள சொர்க்கவாசல்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு

Published On 2021-12-13 01:45 GMT   |   Update On 2021-12-13 06:07 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது.

பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான இன்று (திங்கட்கிழமை) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

நாளை (செவ்வாய்க்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். வழக்கமாக மார்கழி மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசி வரும். ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வருகிறது. 19 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அபூர்வ நிகழ்வு வரும் என்று கூறப்படுகிறது.

இதன்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் (லக்னப்படி) எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுகிறார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். காலை 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவில் வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட சுழலும் கேமராக்கள் மற்றும் 4 வீதிகளிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்...திருமண வரம் அருளும் மஞ்சமாதா
Tags:    

Similar News