செய்திகள்
நூருல் ஹசன்

பாகிஸ்தான் நாட்டின் மிகவும் பருமனான நபர் சிகிச்சையின் போது மரணம்

Published On 2019-07-08 12:33 GMT   |   Update On 2019-07-08 12:33 GMT
பாகிஸ்தானில் 330 கிலோ உடல் எடையை குறைப்பதற்காக ஆபரேஷன் செய்துகொண்ட நபர் ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற்ற ஒரு ரகளையால் கவனிப்பார் யாருமின்றி உயிரிழந்தார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நட்டின் லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாதிக்காபாத் பகுதியை சேர்ந்தவர் நூருல் ஹசன். சிறு வயதில் இருந்தே உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரது எடை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே வந்து 55-வது வயதில் சுமார் 330 எடையுள்ள மனிதராக மாறிப் போனார்.

அவருக்கு எடை குறைப்புக்கான அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தார் விரும்பிய நிலையில் பாகிஸ்தான் நாட்டின் மிகவும் பருமனான நபர் என அந்நாட்டு ஊடகங்களால் குறிப்பிடப்பட்ட நூருல் ஹசன் பற்றிய தகவல் அறிந்து அவருக்கு உதவி செய்ய பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவெத் பாஜ்வா முன்வந்தார்.

வீட்டின் சுவரை எல்லாம் இடித்து வெளியே கொண்டு வரப்பட்ட நூருல் ஹசன் லாகூர் நகரில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு செல்ல வசதியாக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை காமர் ஜாவெத் பாஜ்வா 
அனுப்பி வைத்திருந்தார்.

லாகூரில் உள்ள ஷலாமார் மருத்துவமனையில் கடந்த 28-6-2019 அன்று நூருல் ஹசனுக்கு ‘லிப்போசக்‌ஷன்’ எனப்படும் எடை குறைப்புக்கான சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், அதே  தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஒரு பெண் நோயாளி இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இறந்தவர்களின் உறவினர்கள் பலர் அந்த அறைக்குள் கும்பலாக வந்து கூச்சலிட்டு, அழுது ரகளை செய்தனர். இதனால், அங்கு சற்றுநேரம் கலவரமான சூழல் ஏற்பட்டது.

அப்போது அங்கு கண்காணிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நூருல் ஹசனின் உடல்நிலை திடீரென்று மோசமடைந்தது. மூச்சுத்திணறலால் அவர் திக்குமுக்காடிக் கொண்டிருந்த நிலையில் அங்கு ஏற்பட்ட ரகளை காரணமாக அவரை கவனிக்க அங்கு மருத்துவர்களோ, செவிலியர்களோ அருகில் இல்லை என கூறப்படுகிறது.


இதனால், நூருல் ஹசன் மற்றும் அங்கே சிகிச்சை பெற்றுவந்த இன்னொரு பெண் என இருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு கொண்டிருந்த நூருல் ஹசனுக்கு முதலுதவி செய்து அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் முயன்றதாகவும், அதற்குள் நிலைமை கைமீறி போய் விட்டதாகவும் கூறுகின்றனர்.

எனினும், அங்கு இன்று நடந்த களேபரத்தின்போது என்ன நடந்தது? என்பதை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பின்னர்தான் உண்மை நிலவரம் தெரியவரும் என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
Tags:    

Similar News