செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று தமிழக அரசின் உத்தரவுபடி கிராமப்புறங்களில் உள்ள சலூன் கடைகள் திறக்கப்பட்டன.
நாமக்கல்:
கொரோனா பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று தமிழக அரசின் உத்தரவுபடி கிராமப்புறங்களில் உள்ள சலூன் கடைகள் திறக்கப்பட்டன.
இதனால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக முடி வெட்டாமல் இருந்த பொதுமக்கள் தங்களின் முடிகளை திருத்தம் செய்து கொண்டனர். நகர்ப்புறங்களில் இருந்தும் சிலர் கிராமங்களுக்கு சென்றும் முடி வெட்டி கொள்வதை பார்க்க முடிந்தது. இதனால் சலூன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இருப்பினும் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. அங்கு அரசின் தடை உத்தரவை மீறி சலூன் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.