செய்திகள்
இஸ்ரோ சிவன்

தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் இஸ்ரோ குழு சிறப்புடன் பணியாற்றியது - இஸ்ரோ தலைவர் சிவன்

Published On 2020-11-07 23:15 GMT   |   Update On 2020-11-07 23:15 GMT
பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பும் பணியில் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் இஸ்ரோ குழு சிறப்புடன் பணியாற்றியது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா:

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் ஆனது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி நேற்று மாலை 3.12 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ்.01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த செயற்கைக்கோள் 4வது நிலையில் இருந்து தனியாக பிரிந்து வட்டபாதையில் வெற்றிகரம் ஆக நிலை நிறுத்தப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதேபோல் வணிக பயன்பாட்டிற்கான லிதுவேனியா நாட்டை சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுபிடிப்பு செயற்கைக் கோள், லக்சம்பர்க் நாட்டை சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைக் கோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைக்கோள்கள் என அனைத்து 9 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து தனியாக பிரிந்து அவற்றிற்கு உரிய வட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், இஸ்ரோவுக்கு இந்த திட்டம் சிறப்பு வாய்ந்தது.  வழக்கத்திற்கு மாறானது.  ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் பணியை வீட்டில் இருந்து பணியாற்ற முடியாது.  ஒவ்வொரு பொறியியலாளரும் ஆய்வகத்தில் இருக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களைப் பற்றி பேசும்பொழுது, ஒவ்வொரு தொழில்நுட்ப பணியாளரும், ஊழியரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

கொரோனா தொற்று காலத்தில் இஸ்ரோ குழு, தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி சிறப்புடன் பணியாற்றியது. இந்நேரத்தில் இஸ்ரோ பணியாளர்கள் அனைவரும் தரம் நிறைந்த பணியை செய்தனர் என்பது உண்மையில் மனமகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்தார்.
Tags:    

Similar News