செய்திகள்
இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

சுங்குவார்சத்திரம் அருகே இறைச்சிக்கழிவுகளை கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

Published On 2020-01-09 17:01 GMT   |   Update On 2020-01-09 17:01 GMT
சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் இயங்கி வரும் 100-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் இறைச்சிக் கழிவுகளை கடைக்காரர்கள், சந்தவேலூர் பகுதியில் சுங்குவார்சத்திரம்-வாலாஜாபாத் சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் எதிரே பல மாதங்களாக கொட்டி வருகின்றனர்.

இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், வாலாஜாபாத்-சுங்குவார்சத்திரம் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் அனுமதியின்றி இயங்கும் இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சந்தவேலூர் பகுதியில் சாலையோரம் கொட்டி வருவதால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்ககோரி சுங்குவார் சத்திரம் பஜார் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News