செய்திகள்
பர்கூர் அருகே சாலையோரம் நடந்து சென்ற சிறுவன் பலி
பர்கூர் அருகே லாரி டயர் கழன்று ஓடி சாலையோரம் நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில் அவன் பரிதாபமாக இறந்தான்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் கவியரசன் (வயது 10). இவன் தனது பாட்டியுடன் நேற்று காலை அண்ணா நகரில் இருந்து பர்கூர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான்.
அப்போது சென்னையில் இருந்து கேரளா நோக்கி மீன் பாரம் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரியின் டயரின் ஆக்சில் கட்டானது.
இதனால் 2 டயர்களும் தனியாக துண்டாகி சாலையில் ஓடியது. அப்போது சாலையோரம் பாட்டியுடன் நடந்து சென்ற சிறுவன் கவியரசன் மீது டயர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இதையடுத்து டிரைவர், லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.