செய்திகள்
மோதல் நடைபெற்ற பகுதி

சிரியாவில் ரஷிய-அமெரிக்க போர் வாகனங்கள் மோதல் - 4 அமெரிக்க வீரர்கள் காயம்

Published On 2020-08-27 00:10 GMT   |   Update On 2020-08-27 00:10 GMT
சிரியாவில் ரஷிய-அமெரிக்க போர் வாகனங்கள் திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர்.
டமாஸ்கஸ்:

சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவு  அளித்து வருகிறது. குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு பகுதிகளை ரஷியா ஆதரவுடன் சிரிய அரசுப்படைகள் கைப்பற்றி வருகிறது. 

குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அளித்து வந்த் ஆதரவை விலக்கிக்கொண்ட போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் கச்சா எண்ணெய் வளம் அதிகம் இருப்பதால் அமெரிக்க படைகள் அங்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஐஎஸ் பயங்கரவாதிகளை
ஒழிக்கும் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

ரஷிய மற்றும் அமெரிக்க படைகள் குர்திஷ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் அருகருகே ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாலும் தாக்குதல்களை நடத்தி வருவதாலும் அவ்வப்போது இந்த இரு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், வடக்கு சிரியாவின் டேரிக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரஷிய ராணுவத்தின் சோதனைச்சாவடி அருகே நேற்று வழக்கமான ரோந்து பணிகாக அமெரிக்கா போர் வாகனம் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, அங்கு வந்துகொண்டிருந்த ரஷிய போர் வாகனம் திடீரென அமெரிக்க போர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமெரிக்க போர் வாகனத்தில் பயணம் செய்த 4 போர் வீரர்கள் காயமடைந்தனர்.

இந்த மோதல் சம்பவம் ரஷிய படையினரால் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமெரிக்க போர் வாகனம்
ரஷியா ரோந்து பணியை இடையூறு செய்யும் பட்சத்தில் செயல்பட்டதால் ரஷிய போர் வாகனம் மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மோதலின் போது ரஷிய போர் ஹெலிகாப்டர் அமெரிக்க வாகனத்திற்கு மிக அருகில் பறந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது 

ரஷிய-அமெரிக்க போர் வாகனங்கள் மோதலில் ஈடுபடும் சம்பவம் சிரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த மோதல் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கலாம் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.      

Tags:    

Similar News