உள்ளூர் செய்திகள்
அதிமுக

மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்துங்கள்- அ.தி.மு.க. தலைமை கழகம் அறிக்கை

Published On 2022-01-21 09:19 GMT   |   Update On 2022-01-21 09:19 GMT
வருகிற 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்துங்கள் என அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
சென்னை:

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25-ம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவது நமது கடமையாகும்.

அன்னைத் தமிழுக்காக தங்கள் இன்னுயிரைத் துறந்த தியாகச் செம்மல்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் நாள், மாவட்டத் தலைநகரங்களில், மொழிப் போர்த் தியாகிகளின் தியாகங்களை நினைவுகூரும் வகையில், வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்களும், மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கமும் செலுத்தப்படுவது வழக்கம்.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மிகுதியின் காரணமாக, வருகின்ற 25.1.2022 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டக் கழகங்களின் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், மாணவர் அணி நிர்வாகிகளும் இணைந்து, மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, வீரவணக்கம் செலுத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News