ஆன்மிகம்
திருக்காஞ்சி கோவிலில் அகத்தியர் குரு பூஜை
வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு குரு பூஜை நடைபெற்றது.
வில்லியனூர் அருகே திருக்காஞ்சியில் கங்கவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மக தீர்த்தவாரி, மகாளய அமாவாசை அன்று திரளான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்த கோவிலில் உள்ள லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது. அதற்காக அகத்தியருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று குரு பூஜை நடைபெறும்.
அதன்படி மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரமான நேற்று அகத்தியருக்கு குரு பூஜை நடைபெற்றது. முன்னதாக காலையில் அகத்தியருக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அகத்தியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீதாராமன் தலைமையில் சிவாச்சாரியார் சரவணன் மற்றும் பலர் செய்திருந்தனர்.