செய்திகள்
கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பயிர் காப்பீட்டுத்தொகை கேட்டு மனு கொடுக்க வந்த விவசாயிகளை படத்தில் காணலாம்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பயிர் காப்பீட்டுத்தொகை கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2021-01-12 10:58 GMT   |   Update On 2021-01-12 10:58 GMT
கரூர் அருகே குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயிர் காப்பீட்டுத்தொகை கேட்டு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கரூர்:

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

குளித்தலை வட்டம், மருதூர் கிராமம் வடக்கு 2 மற்றும் தெற்கு 1, குமாரமங்கலம் கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள் சார்பில் புகார் பெட்டியில் போடப்பட்ட மனுவில், நடப்பு சம்பா நெல் சாகுபடியில் இயற்கையின் பாதிப்பால் மழைநீரால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர் முழுவதும் மழைநீரில் மூழ்கி உள்ளது. (நெற்மணிகளுடன் கூடிய பயிர் அழுகியும், முளைத்தும் சேதம் அடைந்து விட்டது) மற்றும் நோய் தாக்குதல் பாதிப்புகளால் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த குளித்தலை ஒன்றிய வேளாண்மைதுறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளார்கள். நாங்கள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளோம். ஆகவே தாங்கள் நேரடியாக பார்வையிட்டு உரிய பயிர் காப்பீட்டுத்தொகை எங்களுக்கு கிடைக்க உரிய ஆவனம் செய்ய வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

பசுமைப்புரட்சி விவசாயிகள் சங்கம் சார்பில் போட்ட மனுவில், வெள்ளியணை ஊராட்சி தென்பாகம் கிராமத்தில் பெரியகுளம் உள்ளது. மேற்படி குளத்திற்கு திண்டுக்கல் மாவட்டம், அழகாபுரியில் குடகனாறு அணை கட்டப்பட்டு, அணையில் இருந்து வலது பிரதான கால்வாய் வெட்டப்பட்டு சுமார் 54 கிலோ மீட்டர் தூரம் வந்து வெள்ளியணை பெரிய குளத்திற்கு தண்ணீர் வர அரசு ஆணை உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அணைக்கு தண்ணீர் வராததால் மேற்படி வலது பிரதான கால்வாய் மிகவும் மோசமாக சீமை கருவேல் மற்றும் புதர் மண்டி வாய்க்கால் தண்ணீர் வரும் தடம் தெரியாமல் உள்ளது. ஆகவே தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் தற்போது மேற்படி குடகனாறு அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது. ஆகையால் அணை நிரம்பினால் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் மேற்படி வலது பிரதான கால்வாய் ஆரம்பம் முதல் வெள்ளியணை பெரியகுளம் வரை உடனடியாக தூர்வாரவும், மேலும் வெள்ளியணை பெரியகுளம் சீமை கருவேல் அதிகம் வளர்ந்து குளத்தையே அடைத்து விட்டது. குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

பூசாரிகள் பேரமைப்பு விசுவ இந்து பரிஷத் சார்பில் போட்ட மனுவில், கரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் பூசாரிகள் கிராமந்தோறும் தினமும் காலையிலும், மாலையிலும் பூஜை செய்து வருகிறார்கள். கொரோனாவால் 6 மாதங்களாக கோவில்கள் திறக்கப்படாத நிலையில் இருந்தபோது அனைவரும் வாழ்வாதாரம் இன்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் சுமார் 200 பூசாரிகளுக்கு மேல் கிராமக்கோவில் பூசாரிகள் நலவாரிய அட்டை வேண்டி கடந்த 2017 முதல் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தகுந்த ஆதாரங்கள் இணைத்து படிவம் கொடுத்தார்கள்.

2017 முதல் இதுநாள் வரை எந்த பூசாரிகளுக்கும் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்படவில்லை. நலவாரிய அட்டை பெற்றிருந்த பூசாரிகளுக்கு மட்டும் 2 தவணையாக ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை தமிழக அரசு வழங்கியது. எனவே பூசாரிகளுக்கு கிராம கோவில் பூசாரிகள் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு பரிந்துரை வழங்கி பூசாரிகள் அனைவருக்கும் நலவாரிய உறுப்பினர் அட்டை பெற்று தரவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News