தமிழ்நாடு
அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்

மாணவி லாவண்யா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அ.தி.மு.க வலியுறுத்தல்

Published On 2022-01-25 18:28 GMT   |   Update On 2022-01-25 18:28 GMT
இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நிகழா வண்ணம் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

கடந்த எட்டு மாதங்களாக பெண்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பெண் குழந்தைகள் பாலியல் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வருவது தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த எட்டு மாத காலமாக, பாலியல் புகார் காரணமாக ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது, பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள் உயிரிழப்பது, பள்ளியில் தீயில் கருகிய நிலையில் பத்து வயது சிறுமி  மர்மமான முறையில் இறப்பது என தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான , குற்றங்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன.  

இந்தச் சூழ்நிலையில், அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17-வயது லாவண்யா என்ற சிறுமி தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி என்னும் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் விடுதிக் காப்பாளர் அளித்த துன்புறுத்தலால் மனஉளைச்சல் ஏற்பட்டு களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி ஆற்றொணாத் துயரத்தையும், மிகுந்த மன வேதனையையும்  எனக்கு அளித்துள்ளதோடு தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழந்த செல்வி லாவண்யாவிற்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்றால் அதைத் துணிவுடன் பெற்றோர்களிடத்திலோ அல்லது பள்ளி நிர்வாகத்திடமோ தெரிவித்து அந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர முயற்சிக்க வேண்டுமே தவிர, இதுபோன்று உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என்பது பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்றும், எனவே உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மாணவ, மாணவியரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

லாவாண்யா இறப்பதற்கு ஒருநாள் முன்பு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் விடுதிக் காப்பாளர் தன்னை வீட்டிற்கு அனுப்பாமல் கணக்குகளை பராமரிக்கச் சொன்னதாகவும், படிப்பதைக் காரணம் காட்டி மறுத்தால் திட்டுவார் என்றும், விடுதியில் ஏதாவது பொருள் காணாமல் போனாலும் அதற்கு தான்தான் காரணம் என்று கூறி திட்டுவார் என்றும், தன்னுடைய தற்கொலைக்கு விடுதிக் காப்பாளர்தான் காரணம் என்றும் , கூறியுள்ளதாக செய்தி வந்துள்ளது. 

அதே சமயத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருடைய உறவினர் விசாரித்தபோது மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாக அந்த மாணவி குறிப்பிட்டதாகவும், இதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் ஒருதரப்பு கூறுகிறது. ஆனால், அரசுத் தரப்போ செல்வி லாவண்யாவின் தற்கொலைக்கும், மத மாற்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறுகிறது. 
மற்றொரு தரப்பு கழிவறைகளை சுத்தம் செய்தல், விடுதிகளை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை பள்ளி நிர்வாகம் அளித்ததே இந்தத் தற்கொலைக்குக் காரணம் என்று கூறுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் செல்வி லாவண்யா இறந்ததற்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது. மேற்படி சிறுமியின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, அரசியலுக்கு அப்பாற்பட்டு, லாவண்யாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பதை விரைந்து கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு தமது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News