ஆன்மிகம்
மத்தூர் மாரியம்மன் கோவில்

மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது

Published On 2021-02-24 03:49 GMT   |   Update On 2021-02-24 03:55 GMT
கொளத்தூர் அருகே உள்ள மேட்டுப்பளையூரில் மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் தாலுகா கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூர், மேட்டுப்பளையூர், வீரனூர், கோமாளிகாடு ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி, அம்மன் கோவில் ஒன்றை கட்டி வழிபாடு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலையின் நடு மலையில் உள்ள ஒரு ஓடையில் அம்மன் சுயம்புவாக காட்சி அளிப்பதை கண்டனர்.

அப்போது பக்தர் ஒருவருக்கு அருள் வந்து, நான் அம்மன் சக்தியாக உருவாகி மந்தையில் இருந்து உருவானதால் நான் மத்தூர் மாரியம்மன் என்ற திருநாமத்தில் வீற்றிருப்பதாக அருள்வாக்கு சொன்னார். பின்னர் அங்கிருந்த சுயம்பு அம்மனுக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டு மேட்டுப்பளையூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.

கோடைகாலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என இந்த பகுதி கிராம மக்கள் மழை வேண்டி வழிபாடு செய்து இந்த மலை அம்மனை மத்தூர் மாரியம்மன் என அழைத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஸ்ரீ மத்தூர் மாரியம்மன் பல நோய்களை போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தையே தல விருட்சமாக கொண்டு சக்தியின் மற்றொரு நிலையாக அருள்பாலிப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள்.

இந்த நிலையில் இந்த 3 கிராம மக்கள் ஒன்றிணைந்து மத்தூர் மாரியம்மனுக்கு கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டனர். தற்போது ரூ.2 கோடியில் திருப்பணிகள் முடிந்து இந்த கோவிலுக்கு இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.

இந்த கோவிலின் நான்கு புறமும் பிரதான வாசல்கள் ஆகம விதிகளின்படி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் ஒருபுறம் பிரமாண்டமான குதிரை சிலைகளும், மற்றொரு புறம் நவக்கிரகங்களுக்கான மகா மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் மேட்டூர்-மாதேஸ்வரன் மலை செல்லும் வழியில் கருங்கல்லூர் பஸ் நிறுத்தத்திற்கு அருகில், பெட்ரோல் பங்கிற்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கோவிலின் தர்மகர்த்தாக்கள் மாரப்பன், குமார் மற்றும் கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

குடிபோதைக்கு அடிமையானவர்கள் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தினால் அவர்கள் குடிபோதையில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கோவிலுக்கு வந்து கயிறு கட்டி வழிபாடு நடத்தி குடிபோதை என்னும் கொடிய தீய பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளதாக இந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கோவிலில் ஆயாதி கணித்து, வாஸ்து நட்சத்திரம், ராசி நட்சத்திரம், கர்த்தா நட்சத்திரம், ராசிக்கு பொருந்திய ஆயாதி அளவுகள் தீர்மானித்து 3 நிலை விமானம் நீண்ட சதுரம் அமைப்பில் 3 பக்க வாசலுடன் கூடிய மகா மண்டபத்துடன் அமைந்திருப்பது சிறப்பானதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் மண்டல பூஜை நாளை(வியாழக்கிழமை) முதல் 48 நாட்களுக்கு நடைபெற உள்ளது. பூஜைக்கு பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோவில் விழாக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News